6:38 PM |
உரிமை முழக்கம்
 


எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முற்சி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் தற்போது இராணுவத்தின் சதி திட்டங்களுக்கு பின்னால், ஊடகங்களின் பொய் பரப்புதல்களுக்கு பின்னால் அநியாயமாக கவிழ்க்கப்பட்டு இராணுவ தளபதி சிசி என்ற சர்வ...ாதிகாரியின் ஆட்சி நடந்து வருகிறது.

உலகில் என்ன பிரச்சினை நடந்தாலும் தன் நீண்ட மூக்கினை நுழைக்கும் அமேரிக்கா, தொட்டில் குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட முன் வந்து நின்றது வேடிக்கையே.

என்னோடு பனி புரியும் எனதருமை எகிப்திய நண்பர்கள் இதனை மிகப்பெரும் சதியாகவே கருதுகிறார்கள்.

இராணுவத்தின் அட்டூழியங்களை எதிர்த்து எகிப்திய வீதிகளில் மக்கள் இன்றும் முழக்கமிட்ட வண்ணம் உள்ளனர். குறிப்பாக பெண்கள், அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகள். அச்சுறுத்தல்கள் பல வந்த போதிலும் ஒரு நாளும் இவர்கள் நிறுத்தவில்லை தங்களின் முழக்கங்களை.

இவர்கள் உள்ளத்தில் கொண்டிருப்பது ஏகத்துவ கொள்கை அல்லவா. வாழ்வின் இலட்சியம் மறுமை அல்லவா.

போராட்டங்களில் இவர்கள் கொண்டிருந்த உறுதி அரசின் கண்களையே உறுத்தியது. இறுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். போராட்ட களத்தில் பெண்கள் பகுதியை முன்னின்று வழி நடத்தியவர்கள் என 21 பெண்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமானோர் 20 வயதை கடந்திருக்கவில்லை.

இவர்களின் போராட்டம் நம் ஊரில் நடப்பது போல் ஒரு நாள் அடையாள போராட்டமல்ல. காலையில் ஆர்பாட்டம் நடத்தி, மதியம் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை ஆவதற்கு, இவர்களின் போராட்டம் வருடம் ஆனாலும் தொடரலாம்..... ஆனால் முழக்கங்கள் ஓயப்போவதில்லை.

சர்வதிகார இராணுவ அரசாங்கத்தின் கையில் இருக்கும் நீதி மன்றம் இவர்களின் வழக்கை விசாரித்து 11 ஆண்டுகள் தண்டனை விதித்தது. ஆனால் உலகெங்கிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இவர்கள் அனைவரும் சமீபத்தில் விடுதலை அடைந்தார்கள்.

விடுதலைக்கு பின்னர் அந்த புரட்சி பெண்களிடத்தில் அவர்களின் விடுதலை பற்றிய வினா தொடுக்கப்பட்டது.

அப்போது அவர்கள் கூறியது இதுதான்; "கை விலங்குகளும் கடுமையான சிறைச்சாலைகளும் ஒரு நாளும் எங்களின் உரிமை முழக்கங்களை நிறுத்தப்போவதில்லை. எங்கள் போராட்டம் தொடரும், விடியல் ஒருநாள் பிறக்கும்"

இவர்களின் பதில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா ? ஆம் சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்ற அந்த தூய மார்க்கம் நம் உள்ளத்தில் ஊறிப்போனால் இவ்வுலகம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. மறுமையில் இலட்சியத்தை அடைய துடிக்கும் நமக்கு இவ்வுலகில் எந்த தடைகளையும் தாண்டும் தைரியத்தை கொடுப்பது வல்ல இறைவனின் வேதம் மட்டுமே.

எகிப்திய மக்களின் உரிமை முழக்கங்கள் வெற்றி பெற மனதார பிரார்த்திப்போம். இந்த பெண்களை முன்மாதிரிகளாக நம் பெண் மக்களிடத்தில் அறிமுகம் செய்திடுவோம்.

-உமரின் தந்தை -

Read more…

எளிமையின் மறு பெயர் தோழர். நல்லக்கண்ணு.

11:10 AM |
தோழர். நல்லக்கண்ணு
 
தன் பெயருக்கு தகுந்தாற்போல் இந்த உலகில் மிக உயரிய நல்லெண்ணத்தோடு வாழக்கூடிய மிக எளிமையான மனிதர். எளிமை, நேர்மை, வாய்மை என்ற மூன்று குணங்களை தன்னோடு எப்பொழுதும் வைத்திருக்கும் மிக அமைதியான, நேர்மையான அரசியல்வாதி.
 
2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், ஒருமுறை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாலன் இல்லத்திற்கு (இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகம்) அவரை நானும் எனது நண்பர் குணசேகரன் அவர்களும் கோவை சிறைவாசிகள் சம்பந்தமாக நாங்கள் நடத்த இருந்த ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தோம். வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் நாங்கள் வந்த விவரத்தை கூறிய போது நல்லக்கண்ணு ஐயா அவர்கள் இருக்கும் இடத்தை எங்களிடம் காட்டினார். அலுவலகத்தின் முதல் தளத்தில் இறுதியாக அமைந்திருக்கும் ஒரு அறையில் அவர் தங்கி இருப்பதை தெரிந்து கொண்டு அந்த இடம் நோக்கி விரைந்தோம்.
 
இந்தியா முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மாபெரும் கட்சியின் தலைவர், கம்முநிஸ்ட் இயக்கத்தின் போர் வாள், தனது அரசியல் வாழ்வை 15 ஆம் வயதிலேயே ஆரம்பித்த இளைஞர், மிக தீவிர அரசியலில் ஈடுபட்டதனால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறை போராளி, சிறப்பு வாய்ந்த பல விருதுக்களை பெற்ற உயர்வானவரை பார்க்க போகிறோம் என்ற ஒரு சிறு தயக்கத்தோடு அவர் இருக்கும் அறையை அடைந்தோம். கதவு திறந்தே இருந்தது. அனுமதி பெற்று உள்ளே சென்றோம். மிக அமைதியான குரலில் வரவேற்று எங்களை அமர சொன்னார். அமர்ந்த நானும் தோழர். குணசேகரன் அவர்களும் அந்த அறையை சுற்றி பார்த்தவண்ணம் இருந்தபோது நல்லக்கண்ணு ஐயா அவர்களிடம் குணசேகரன் பேச தொடங்கினார். அப்பொழுது அறையை பார்த்துகொண்டிருந்த நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டேன். இதுவரை நான் கண்டதில் இது போன்ற ஒரு எளிய மனிதரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. ஒரு சிறு ஜன்னல் வழியே வரும் வெளிச்சம் அங்கு பரவியிருக்கிறது. இரவு நேரத்தில் வெளிச்சம் தேவைப்படும் என்று ஒரேயொரு 40 வாட்ஸ் மின் விளக்கு அந்த அறையில் தொங்கி கொண்டிருக்க, நிறைய புத்தகங்களும், அவர் அமருவதற்கு ஒரு நாற்காலியும், எழுதுவதற்கு ஒரு மேசையும் மட்டுமே இருந்தது. சந்திக்க வரும் விருந்தாளிகள் அமருவதற்கு நீண்ட பெஞ்சும் (bench)அத்தோடு அவர் படுத்து உறங்குவதற்கு கோர பாய் ஒன்று தலையனையோடு சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இரவில் தூங்க செல்லும் நேரத்தில் நாங்கள் அமர்ந்திருந்த பலகை பெஞ்ச் (bench ) அவர் படுத்துறங்கும் கட்டில். அவ்வளவுதான். இதை தவிர அவருடைய அறைக்கு வெளியில் உள்ள நடைபாதையில் ஒரு வேட்டி சட்டை துவைத்து காய போடப்பட்டிருந்தது. அதுவும் அவரே துவைத்து காய போட்டிருக்கிறார். நான் நினைத்து வந்த அத்தனை கணிப்புகளையும் புரட்டி போட்டது இந்த சந்திப்பு.
 
அப்பொழுது என் மனதில் நபி (ஸல்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க வந்த காட்சி நினைவில் ஓடியது. மக்களுக்கு உன்னத வாழ்வியல் நெறியை போதித்த உலகத்தின் அருட்கொடை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்கையை அமைத்து கொண்ட விதத்தை பார்த்து உமர் அவர்கள் அழுகிறார்கள்.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர்கள் எல்லாம், தங்க உணவு தட்டில் உணவு உண்டிடும் போது அல்லாஹ்வின் தூதர் நீங்கள் இந்த காயிற்று கட்டிலில் உறங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது என அழுதார் உமர். அதை கண்ட நபிகள் நாயகம் "உமரே" இந்த உலக வாழ்வு ஒரு அற்பம் என உங்களுக்கு தெரியாதா ? என சப்தமாக கூறும்போது உமர் தன்னுடைய அழுகையை நிறுத்தினார் என இஸ்லாமிய வரலாறு நமக்கு போதிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவரை, இறை தூதரை பின்பற்றும் நாம் எவ்வாறு இந்த உலகில் வாழ்கிறோம் என்பதை ஒரு கணம் நினைத்து பார்த்தேன்.
 
ஆனால், இஸ்லாமிய கொள்கையை வாழ்வியல் நெறியாக ஏற்காவிட்டாலும் தன்னுடைய வாழ்வை இஸ்லாம் காட்டும் வழியில் எளிமையாக வாழ்ந்திடும் ஐயா நல்லக்கண்ணு அவர்களை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த சத்திய மார்கத்தை அவர் ஏற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக இருகரம் ஏந்துகிறேன். நீங்களும் எந்திடுங்கள் ........
Read more…

போராளிகளே......

4:29 PM |



போராளிகளே....

 சிறைபட்ட உங்களின் பாதங்கள் இம்மாதத்தோடு  15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் 1998 நவம்பர் கலவரத்தில் படுகொலை செய்யப்பட 19 முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லையே..... ?
 
படுகொலை செய்யப்பட்டவர்கள் சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் என்பதாலா ?
படுகொலைக்கு நீதி கேட்டு கோவை வீதிகளில் முழக்கமிட்ட ஒரே காரணத்தினால், உன்னை தீவிரவாதி என்று கைது செய்து சிறையில் தள்ளியது காவல் துறை.

நிச்சயமாக நீ ஒரு தீவிரவாதி அல்ல, சமூக போராளி என்பதை நாங்கள் மட்டுமல்ல, உண்மைக்காக போராடும் ஒவ்வொரு இளைஞனும் அறிந்தே வைத்திருக்கின்றான்.

அனுமானத்தின் அடிப்படையிலும் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த மட்டுமே இன்று நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்தவே மீடியாக்கள் இயங்குகின்றன.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும், சிறுபான்மை சமுதாயத்தையும் குறி வைத்தே கைது படலங்களை கட்டவிழ்த்து விடுகிறது நம் காவல்துறை.

நேற்றைய செய்தி பழையது, இன்றைய செய்தி புதியது என நாட்களை கூட மெகா சீரியல்களை போல நினைக்கும் மக்கள் மத்தியில்தான் இன்று வரலாறை நினைவூட்ட வேண்டிய அவல நிலை.

உன் விடுதலைக்கு என்றும் கைய்யேந்திடும் அன்பு நெஞ்சங்கள் இன்றும், என்றும் இந்த பூமியில் வாழ்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதே. சோர்ந்துவிடாதே, துவண்டுவிடாதே.

உண்மை ஒரு நாள் வெல்லும்....

Read more…

விடுதலை பெற்றும் மறு சிறைவாசம்

12:59 PM |


அப்துல் நாசர் மாதனி.
வெகு சீக்கிரத்தில் மக்கள் அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். அனல் பறக்கும் மேடைப்பேச்சு. தூங்கிய இஸ்லாமிய இளைங்கர்களை தட்டி எழுப்பியவர். கேரளாவின் பழனி பாபா என்று தமிழ் முஸ்லிம்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர். இந்தியாவை ஹிந்து நாடாக்க வேண்டும் என அனுதினமும் திட்டம் தீட்டிடும் பாசிச பயங்கரவாதிகளை மேடைகள்தோறும் எதிர்த்தவர்.  RSS பயங்கரவாதிகள் எறிந்திட்ட குண்டினால் தன் ஒரு காலை இழந்தவர் என இவருடைய வீர வரலாற்றினை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதி என கோவை விரைவு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் இன்று கர்நாடகத்திலே மறு சிறை கண்டு கொண்டிருக்கிறார். அரசினுடைய பாரபட்ச பட்டியலிலே இவருடைய பெயரும் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 25 ஆம் தேதி இவருடைய பிணை கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ள செய்தியை கண்டு மிகவும் கவலை அடைந்தோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரர்களின் ரத்தத்தில் சோப்பு போட்டு குளித்த நரேந்திர மோடி இன்று உல்லாசமாய் சுற்றித்திரிய மாதனி போன்ற உரிமைப்போராளிகள் தொடர்ந்து சிறை காணுவார்கள் என்பதில் வியப்பேதுமில்லை. திட்டமிட்ட சதி இன்னும் எம் இந்திய மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சாட்சி இது.

மாதனி அவர்கள் கடந்த 2010 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் கர்நாடகத்தை ஆளும் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சியினால், 2008 ஆம் ஆண்டு நடந்த பெங்களுரு குண்டுவெடிப்பு வழக்கில் 31  வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து தெஹல்கா பத்திரிக்கை வெளியிட்டிருந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.  "Why this Man still in Prison" "ஏன் இந்த மனிதர் இன்னும் சிறையில் இருக்கிறார்" என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அந்த கட்டுரையில் PDP கட்சியின் கேரளா மாநிலம் காசர்கோடு தலைவர் சுபைர் தந்த தகவல்களை படித்துவிட்டு ஒன்றை மட்டும் புரிந்து கொண்டோம் அது என்னவென்றால், பாசிசத்தை சட்டமாக்க துடிக்கும் கர்நாடக பாரதிய ஜனதா அரசு இந்த உடல் ஊனமுற்ற சகோதரன் சாகும்வரை விடமாட்டார்கள் போலும். 
சுபைர் கூறியிருந்தார்; " நான் மாதனி அவர்களை சந்தித்தப்பொழுது மிகவும் களைப்பாக காணப்பட்டார். அவரின் கண் இமைகளின் கீழ்பகுதி மிகவும் கருப்பாக காணப்பட்டது. நான் மாதனி அவர்களிடத்தில் காரணம் கேட்டப்பொழுது அவர் சொன்னார், சிறைப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளும் என் அறையில் எறியும் எந்த ஒரு விளக்கையும் காவலர்கள் அமர்தியதே இல்லை. மிக பிரகாசமான விளக்குகளும், நவீன கேமராக்களும் என 24 X 7  எரிந்துகொண்டே இருப்பதினால் என்னால் உறங்கமுடியவில்லை. அந்த கேமராக்கள் என் கழிவறையும் விட்டு வைக்கவில்லை" என்பதுதான் அந்த செய்தி. பத்து வருட காலம் இன்னல்களையும், துன்பங்களையும் சுமந்து கழித்திட்ட பின்னர் நிரபராதி என்று நீதிமன்றம் சொன்ன பிறகு, தன் நெஞ்சுயர்த்தி வெளி சென்றாயே, இன்று மறுபடியும் சிறைபட்டாயே எத்தனை சோதனைகள் ?

இவர் எங்களோடு கோவை சிறையில் பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும் அரசு புனைந்திட்ட பொய் வழக்குகள் எங்கள் மத்தியில் உண்மை நட்பையும், இஸ்லாமிய சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தியது. மிக கம்பீரமான உடல், சுன்னத்தான தாடி, ஒரு கால் இல்லாவிட்டாலும் மறு காலை வைத்து மகிழ்ச்சி கண்டவர் மாதனி அவர்கள். இறைவன் நாளை மறுமையில் என்னிடத்தில் என் ஒரு காலை பற்றிய கேள்விக்கு நான் இங்கேயே பதில் வைத்திருப்பவன் என அடிக்கடி எங்களை ஈமானை தேற்றுபவர்.

இஸ்லாமிய கல்வி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மிக அவசியம் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர். சிறை கொட்டகையின் சுவற்றில் கருப்பு சாயம் பூசி, சுண்ணாம்பு குச்சிகளால் எங்களுக்கு அரபு பாடம் நடத்தியவர். அனுதினமும் எங்களை சந்தித்து மார்க்க விஷயங்களை விவாதிப்பவர். இப்படி இவருடைய நற்பண்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  வாழ்வின் ஒரு பகுதியை சிறைச்சாலையில் கழித்துவிட்டு 10 ஆண்டுகளுக்கு பின் அவர் விடுதலை அடைந்துவிட்ட அதே நாளில் தான் எங்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. எங்களின் துயரங்கள் ஒருபுறம் இருக்க அவர் பெற்ற விடுதலையை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். ஏனென்றால் அவர் நோய்களினால் பட்ட அவதிகளும் கஷ்டங்களும் காண்கின்ற எங்களையே அது வாட்டுவதாய் இருந்தது என்றால் சர்க்கரை நோயையும், நீரிழிவு நோயையும் சுமந்திருக்கும் மாதனி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ? ஆனால் இன்று அவருடைய பிணை உச்சநீதிமன்றத்தால் கூட மறுக்கப்பட்டுவிட்டது எனும் பொழுது முஸ்லிம்கள் இந்திய நீதித்துறையின்மேலும், நீதிமன்றங்களின்மேலும் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது.

நீதியரசர் VR கிருஷ்ணய்யர் சொன்னார்: தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியே.

அன்பு சொந்தங்களே சமுதாயம் விழித்திட வேண்டும் என முழக்கமிட்டவர் இன்று முடங்கி கிடக்கிறார். பிரிவினை என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ளும் நரிகளுக்கு முன்னாள் நம் சமுதாய ஒற்றுமையை காட்டுவோம். எந்தவொரு சூழ்நிலையிலும் நம் சமுதாய சொந்தங்களை மீட்டிட பாடுபடுவோம்.

அன்புடன்

முஹம்மது அன்சாரி,
High Security Block
Coimbatore Central Jail
Coimbatore

Note: Above letter was received personally from Mr. Muhammad Ansari (Gen. Secretary of Al-Umma Islamic Moment) and published at this site through Mr. Kovai Thangappa.
 

 

 
Read more…